கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சோதனையை முடித்துவிட்டு பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வீட்டிலிருந்து வெளியேறிய அமலாக்கத் துறை அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்' (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகவும், பண மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் 'எக்ஸாலாஜிக்' என்ற ஐடி நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் பின்னணியில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
சோதனையை முடித்து திரும்பிய அமலாக்கத் துறை வாகனத்தை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு, செங்கல் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். காரினுள் ஒரு பெண் அதிகாரி உட்பட 4 அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடவே வந்த சிஆர்பிஎஃப் பாதுகாவலர்களின் வாகனங்களையும் தாக்கினர். இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தீவிரமடைந்ததால், காவல் துறையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று காலை பினராயி வீட்டில் ரெய்டு தொடங்கியதிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக திருவனந்தபுரத்திலும் சிபிஎம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பினராயியின் திருவனந்தபுரம் வீட்டின் வாசலில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது கண்ணூர் பூர்வீக இல்லம், மருமகன் முகமது ரியாஸ் இல்லம் உட்பட 10 இடங்களில் சோதனை நடந்தது.
