கர்நாடக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவதற்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு அழைத்தது. அதன்படி இருவரும் டெல்லிக்குச் சென்றனர்.
நேற்று மாலை டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை விட்டுத்தருவது குறித்து சித்தராமையாவிடம் விவாதிக்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
மேலும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சித்தராமையாவிடம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து யோசித்து முடிவெடுப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் மற்றும் அமைச்சரவை மாற்றத்தில் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மற்றொருபுறம், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்கலாமா எனவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றோ அல்லது நாளையோ முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவார் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சாதாரண மக்களின் அசாதாரண 7 கேள்விகள் முதல்வர் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.