ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடிய ஆட்டத்தில் 20 ஓவர்களில் 254/5 என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. ரஜத் பட்டிதார் வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சால் திணறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 5வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், அணியின் கூட்டு முயற்சி மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையே வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்தார். 'இது எங்களுக்கு ஒரு சூப்பரான போட்டியாக அமைந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தினர். அனைவரும் ஒரு தெளிவான நோக்கத்தோடு அதிரடியாக விளையாடிய விதம் அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது' என்று அவர் கூறினார்.
'எதிரணி பந்துவீச்சாளர்களைத் தாக்க வேண்டும் என்று எங்களுக்குள் எந்த ஒரு தெளிவான திட்டமும் இல்லை. ஆனால், நாங்கள் அதற்குத் தயாராக இருந்தோம். நாங்கள் உங்களை வீழ்த்த வருகிறோம் என்பதை உங்களது உடல் மொழியின் மூலமே எதிரணிக்குக் காட்ட வேண்டும். அது இன்று அனைத்து பேட்ஸ்மேன்களிடமும் இருந்தது. சிறந்த உடல் மொழியுடனும், ஆக்ரோஷமான பேட்டிங் மனநிலையுடனும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். குவாலிஃபையர் 1 போன்ற ஒரு பெரிய மேடையில், நாங்கள் விளையாடிய விதமும், ஆட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தியதும் உண்மையிலேயே அற்புதம்' என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், ரொமாரியோ ஷெப்பர்டை இம்பாக்ட் பிளேயராகக் கொண்டு வந்தது, இறுதிப்போட்டிக்குச் சென்றால் மிடில் ஓவர்களில் அவர் எப்படி பந்துவீசுவார் என்பதைச் சோதித்துப் பார்க்கவே எடுத்த முடிவு என்றும், இப்போது நல்ல ஓய்வு கிடைக்கும் என்றும், அடுத்து நேராக ஃபைனல்ஸ் தான் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.