கர்நாடகாவில் 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சித்தராமையா முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது, சித்தராமையா இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த பிறகு, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என கட்சி மேலிடம் ரகசிய ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இல்லாவிட்டாலும், சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாகத் தகவல்.
சித்தராமையா முதல்வராகப் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என திடீரெனக் கோரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்ததால், கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே வார்த்தைப் போர் நீடித்தது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்குமாறு டி.கே.சிவக்குமாருக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று, அவர் தனது கோரிக்கையைத் தற்காலிகமாக ஒத்திவைத்தார். இந்நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம், நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றனர். நேற்று, காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தியை முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேசினார்.
இந்த ஆலோசனையின்போது, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ராகுல்காந்தி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதை ஏற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, முதல்வர் சித்தராமையா தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அவர் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சித்தராமையா மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
