தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் விஜய்யிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் முதல்வரிடம் சமர்ப்பித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவார்கள் என நம்புவதாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தங்கள் தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், இடைநிலை, முதுகலை, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணிமேம்பாடு மற்றும் ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்குதல் போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க முன்வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், 2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கவும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.