தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற விஜய், தனது முதல் டெல்லி பயணத்தை இன்று மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்படுகிறார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்யும் அவர், அங்கு தனக்கு அளிக்கப்படும் அரசு மரியாதையையும் ஏற்க உள்ளார். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமையவுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் அவர் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், மேகதாது அணை விவகாரம், மற்றும் 'பி.எம்.ஸ்ரீ' திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று இரவு டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடனான சந்திப்பு முடிந்ததும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை (வியாழக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள அவர், அன்றைய தினமே சென்னை திரும்ப உள்ளார்.