கடலூர்: அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் இந்திய அணுசக்தி கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 700 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் அணு உலை அடிப்படையிலான அணுசக்தி உலைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புவன் சந்திர பத் மற்றும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டு இயக்குநர்கள் முன்னிலையில் நெய்வேலியில் நேற்று முன்தினம் (மே 25) கையெழுத்தானது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின் துறை இயக்குநர் எம்.வெங்கடாச்சலம் மற்றும் இந்திய அணுசக்தி கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் ராஜேஷ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒத்துழைப்பு, முன்மொழியப்பட்ட கூட்டு முயற்சி கட்டமைப்பின் மூலம், இந்திய அணுசக்தி கழகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால 700 மெகாவாட் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலை திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும். இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நிகர பூஜ்ய கார்பன் உமிழ்வை அடைவதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் மோட்டுபள்ளி தெரிவித்தார். நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நிகர பூஜ்ய கார்பன் உமிழ்வை அடைவதிலும் அணுசக்தி ஒரு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் கூறினார். என்எல்சி இந்தியாவின் அனுபவத்தையும், இந்திய அணுசக்தி கழகத்தின் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, நம்பகமான, நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அடிப்படை மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
