பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கர், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஆறாவது கட்டமாக மேலமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பெரம்பலூரில் இருந்து குன்னத்திற்கு காரில் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே காத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையிலான விசிகவினர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கல் மற்றும் கட்டைகளால் தாக்கும் மோதல் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர். இதற்கிடையில், மோதல் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்ததன் காரணமாக குன்னம் தொகுதி விசிகவினர் கோபம் அடைந்து திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த தாக்குதலில் திமுகவினரே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குன்னத்தில் திமுக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்! கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்! ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் !' என்று பதிவிட்டுள்ளார்.
