தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால கழக ஆட்சியில் மின்சார வாரியத்திற்கு பல நன்மைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் கீழ், சுமார் 3 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரம் நுகர்வோர்களின் உச்சபட்ச மின் தேவையாக 27,307 மெகாவாட் மின்சாரத்தை எவ்வித தடையும் இன்றி வழங்கி, தமிழ்நாட்டு மக்களின் மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகால தி.மு.கழக ஆட்சியில், தேவைக்கேற்ப துணைமின்நிலையங்கள் அதிகரிக்கப்பட்டும், மின்விநியோகக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டும், புதிய மின்மாற்றிகள் மற்றும் HT, LT லைன்கள் நிறுவப்பட்டும் மின்நுகர்வோருக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாதவாறு சிறந்த நிர்வாகத் திறமையுடன் கையாளப்பட்டதே தடையில்லா மின்சாரம் வழங்க காரணமென அவர் கூறியுள்ளார். மேலும், 2021-ல் 'மின்னகம்' என்ற பிரிவை ஏற்படுத்தி, பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து, புதிய மின்இணைப்பு, பெயர்மாற்றம் போன்ற சேவைகளை சிறப்பாக வழங்கியதை, ஏதோ இந்த அரசு வந்த பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது போல ஒரு அமைச்சர் பேசுவது வடிகட்டிய பொய் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போதைய சூழலில், கடந்த 29.04.2026 அன்று தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை 21,307 மெகாவாட் ஆகவும், உச்சபட்ச மின் நுகர்வு 471.456 மில்லியன் யூனிட் ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் 108 டிகிரி வரை இருந்ததால் மின் நுகர்வு உயர்ந்து, மின்விநியோகத்தில் கடும் இடர்பாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்து கண்டனங்களை தெரிவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இதுபோன்று மின்விநியோகத்தில் இடர்பாடுகள் ஏற்படும்போது, அனைத்து மின்தொழிற்சங்க நிர்வாகிகளையும் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை எங்கிருந்து பெறுவது என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் விவாதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மின்சாரத்துறை அமைச்சர், கடந்த கால தி.மு.க ஆட்சியின் மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சிப்பதாக பா.மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏற்பட போகும் கூடுதல் மின் தேவைக்காக எவ்வித முன்நடவடிக்கை எடுக்காமல், துறைரீதியாக போதுமான புரிதல் பெறாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை என்றும், இந்த மின்வெட்டு அமைச்சரின் தகுதியின்மையை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தி.மு.க ஆட்சியின் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, இனிமேலாவது துறைரீதியாக அதிகாரிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விவாதித்து மின் தட்டுப்பாட்டை நீக்கி மக்களை காப்பாற்ற இந்த அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.