இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை வலுப்படுத்தவும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் இன்று (மே 26) புதுடெல்லியில் நடைபெற்றது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'இருதரப்பு கருத்துப் பரிமாற்றம் மற்றும் தற்போதைய உலகளாவிய சூழல் குறித்து விவாதித்தோம். குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் விவகாரங்களில் எங்கள் கவனம் குவிந்திருந்தது. இந்த பிராந்தியத்தின் நான்கு கடல்சார் ஜனநாயக நாடுகளாக, எங்கள் பார்வைகளைப் பகிர்ந்துகொண்டது மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது. பாதுகாப்பான மற்றும் தடையில்லா கடல்சார் வர்த்தகம் குறித்தும், சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பல பரிமாணங்களை குவாட் ஆய்வு செய்தது' என்று தெரிவித்தார்.
மேலும், எரிசக்தி, உரங்கள் மற்றும் முக்கிய கனிமங்களின் இருப்பு நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், 'வரும் காலங்களில், பொருளாதார நடவடிக்கைகள், எரிசக்தி வர்த்தகம் அல்லது கடல்சார் வர்த்தகம் எதுவாக இருந்தாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகிற்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். அதற்கேற்ப குவாட் கூட்டமைப்பின் பொறுப்புகளும் அதிகரிக்கும். பயங்கரவாதம் எனும் பொதுவான அச்சுறுத்தல் குறித்தும் விவாதித்தோம். பயங்கரவாதத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்; தாக்குதல்களுக்கு ஆளாகும் நாடுகளுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உண்டு' என்றும் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசுகையில், 'இந்தோ-பசிபிக் கடல்சார் கண்காணிப்பு ஒத்துழைப்புத் திட்டத்தை தொடங்க குவாட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தோ-பசிபிக் பகுதியில் நமது ஒவ்வொரு நாட்டின் கடல்சார் கண்காணிப்புத் திறன்களையும் மேம்படுத்தும். உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் 60% இந்தோ-பசிபிக் வழியாக நடக்கிறது. கடல்சார் பாதுகாப்பு தடைபடும்போது என்ன நடக்கும் என்பதை தற்போதைய நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன. மேலும், பசிபிக் தீவுகளில் உள்ள துறைமுகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் கூட்டாகச் செயல்பட உள்ளோம். பிஜியின் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றும் திட்டங்களை அறிவிக்கிறோம். இது குவாட் கூட்டமைப்பு ஒரு துறைமுக உள்கட்டமைப்பு திட்டத்தில் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை' எனத் தெரிவித்தார். ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை குவாட் அங்கீகரித்துள்ளதாகக் கூறினார். மேலும், தென்கிழக்கு ஆசியாவில் மோசடி மையங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடலில் கடல்சார் கண்காணிப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் குவாட் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.