2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரும் திருப்பங்களை சந்தித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. ஆட்சியை இழந்து, த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும், த.வெ.க. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து, சட்டசபையில் த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க.வில் இருந்து வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர், எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த பரபரப்பான சூழலில், அ.தி.மு.க. சார்பில் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இவர்கள் மூவரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்தவர்கள்.
மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிலையில், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ராஜினாமாவை ஏற்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்திய நிலையிலும், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.