திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தவெக ஆட்சியானது திராவிட மாடல் 2.0 ஆட்சியாகவே தொடர்கிறது என விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், திமுக ஆட்சியில் நடந்த அதே சம்பவங்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதை நிறுத்த முடியவில்லை என்றும், போதைப் பொருளை ஒழிக்க முடியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் நிகழும் குற்றங்களுக்கு போதை ஆசாமிகள்தான் காரணம் என்றும், மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார். முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் போல் மாறிவிடக்கூடாது என்றும், தவெக ஆட்சி திராவிட மாடல் 2.0 ஆட்சியாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட மின்தடை, தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும் தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச போர்ச்சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாகவும், அதை கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
