மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இந்த முக்கிய பிரச்சனையில், மாநில அரசின் உடனடி நடவடிக்கை அவசியம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், 'காவிரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி, ஒருதலைபட்சமாக அணைகட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் நீர்வள உரிமைக்காக தமிழக காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக குரல் கொடுக்கும்' என தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், 'காவிரி நடுமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, தமிழகத்தின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக்கூறி, கர்நாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும். காவிரி பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை கர்நாடக அரசிடம் தாரை வார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப் பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மேகேதாட்டு அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
