பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில், மே 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம், அதைத் தொடர்ந்து வரும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களுக்குச் சென்றும் ஏராளமான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (மே 26-ம் தேதி) 475 பேருந்துகளும், நாளை 845 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 80 பேருந்துகளும், மே 27 முதல் 30 வரை ஒவ்வொரு நாளும் 170 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து இன்று 35 பேருந்துகளும், மே 27 முதல் 30 வரை ஒவ்வொரு நாளும் 60 பேருந்துகளும் இயக்கப்படும்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, அனைத்து இடங்களிலிருந்தும் அன்று 1,085 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.