மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஒரு பின்னடைவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தின் நலன்களுக்கு பாதகமானது' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், '22.11.2018 அன்று மத்திய நீர்வள ஆணையம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் 2019 ஜனவரியில் தாக்கல் செய்தது. இதை ஆய்வு செய்து அனுமதிப்பது குறித்து பரிந்துரைக்க காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆனால், தமிழகத்தின் தொடர் எதிர்ப்பால் இந்த அறிக்கை விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்பு என்பது முதற்கட்ட நடவடிக்கைதான் என உச்ச நீதிமன்றம் கூறியதை ஏற்க முடியாது. இது காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்கள் பறிக்கப்படுவதற்கு தொடக்கமாக அமையும்' என்றும் அவர் கூறியுள்ளார்.
'காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி, முதல்மடை மாநிலமான கர்நாடகத்தில் அணை கட்ட கடைமடை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால், தற்போது மேகதாது அணை குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் எதிர்ப்பு பயனற்றுப் போகலாம். தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் விண்ணப்பத்தைக் கூட மத்திய அரசு பெறக்கூடாது. இந்த சூழலில், தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கவும், மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர் அரசியல் அழுத்தம் தர வேண்டும்' என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.