தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கடும் கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோடை வெயில் அதிகமாக இருப்பதால், தமிழகத்தின் தற்போதைய வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், முதலமைச்சருடன் கலந்து பேசி, பள்ளிகள் திறப்பு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அதை மேலும் மேம்படுத்தி சத்தான உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவுப் பட்டியலில் மாற்றம் கொண்டுவர கோரிக்கைகள் வந்தால், அது குறித்தும் பரிசீலிக்கப்படும். காலை உணவு தரமாக வழங்கப்படாத நிலை இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் இனி நேர்மையான முறையில் பணிகள் நடைபெறும் என்றும், பணம் கொடுத்தும் பரிந்துரை செய்தும் பணிகள் நடந்த காலம் முடிந்துவிட்டதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மோதல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை முன்னறிவிப்புகளையும் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.