முதல்வர் கோட்டைக்கு வந்து கேரியரில் மதிய உணவு சாப்பிடுவதை ஒரு பெரிய மாற்றமாக இவர்கள் சித்தரிக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவதைப் பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்பின்றி அதிகார வெறியாட்டம் போடுவதைப் பற்றியும் முதல்வர் விஜய் ஒரு வார்த்தையாவது பேசுவாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கைது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை, தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறாகப் பார்த்த தவெக நிர்வாகி கைது, திருவொற்றியூரில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டிற்குச் சென்று அச்சுறுத்திய தவெகவினர் என தொடரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சேலம் ஓமலூரில் மழைநீர் தேங்கிய ரயில்வே சுரங்கப்பாதையில் காரில் சென்ற கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் இந்த துயரம் நிகழ்ந்ததாக அவர் குற்றம்சாட்டினார். சிறப்பான ஆட்சியைத் தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என முதல்வர் கூறிய நிலையில், ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து கொண்டிருப்பதாகவும், இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியால் ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் அவர் விமர்சித்தார்.
ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு தொடர்வதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். முந்தைய ஆட்சிபோல் இந்த ஆட்சியிலும் பல்வேறு சம்பவங்களுக்குப் பதில் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்றும், ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது போல, இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுவதாகவும் அவர் சாடினார். தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், சட்டம்-ஒழுங்கை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை அவர் வலியுறுத்தியுள்ளார்.