தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மை இல்லாத சூழலில், த.வெ.க. பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து, விஜய் முதல்வராகி உள்ளார்.
த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, அதிமுகவின் ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர். குறிப்பாக, அதிமுக மூத்த தலைவர் வேலுமணி தரப்பினர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான இவர்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
ராஜினாமா செய்த இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தற்பொழுது த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் காலியான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.