இந்திய பங்குச் சந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது இந்திய பங்குச் சந்தையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது, இது உலகளாவிய பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஒரு நேர்மறையான போக்கை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயர்ந்தது. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளும் அதிகரித்தன. தற்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி உடன்பாடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த சாதகமான சூழ்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 76,345 என்ற நிலையை எட்டியது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 75,415 புள்ளிகளுடன் நிறைவடைந்திருந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 260 புள்ளிகள் உயர்ந்து 23,979 என்ற நிலையை எட்டியது. நிஃப்டி முந்தைய வர்த்தக நாளில் 23,719 புள்ளிகளுடன் நிறைவடைந்திருந்தது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், லார்சன் அண்ட் டர்போ, இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட 30 நிறுவனங்களின் பங்கு விலைகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன. சர்வதேச அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 97.76 டாலர்களாக பிரென்ட் க்ரூட் தெரிவித்துள்ளது, இது சுமார் 5 சதவீதம் சரிவு என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில், 'கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால், பங்கு வர்த்தகத்தில் இது ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும்' என தெரிவித்துள்ளார்.
