நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 2வது பிரேத பரிசோதனையை நடத்தியுள்ளனர். கடந்த மே 12ஆம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் நடிகை ட்விஷா சர்மா தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
பெற்றோரின் புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகையின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த கணவர் சமர்த் சிங் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போபாலில் நடத்தப்பட்ட முதல் பிரேத பரிசோதனையில் பல குறைபாடுகள் இருந்ததாக ட்விஷாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். குறிப்பாக, ட்விஷாவின் இடது கையில் இருந்த காயங்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்த தழும்புகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும், தற்கொலையா அல்லது கொலையா என்பதைக் கண்டறிய விரிவான தடயவியல் மற்றும் நச்சுயியல் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், மே 22ஆம் தேதி 2வது பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனையை நடத்தி, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ட்விஷாவின் உடல் போபாலில் உள்ள பஜ்பஜ்தா மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.