விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன்' என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் வீரவசனம் எங்கே போனது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பாக கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மரக்காணத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது, 'தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன்' என கடிதம் எழுதிய திரு. ஜோசப் விஜய், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிராக நடக்கும் அன்றாட குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது ஏன்? என்றும் தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும், தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் காட்டும் கவனத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
