முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்கள் கூறும் வைகாசி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரியநாயகியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களுக்குப் பிறகு, காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். திருவிழா தொடங்கியதை அடுத்து, பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த பத்து நாட்கள் நடைபெறும் விசாகத் திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், 6-ம் நாளான மே 29 அன்று இரவு 7.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. மேலும், வைகாசி விசாக தினமான மே 30 அன்று, முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
விழாவின் உச்சகட்டமாக, மே 30 அன்று மாலை 4.30 மணிக்கு பிரம்மாண்டமான தேரோட்டம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் மாதம் 2-ந்தேதி கொடி இறக்குதலுடன் இந்த பத்து நாள் திருவிழா இனிதே நிறைவடையும்.
