நடிகை ருக்மணி வசந்த், 'ஏஸ்', 'மதராஸி' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 'காந்தாரா: சாப்டர் 1' படத்தின் மூலம் பிரபலமான இவர், தற்போது 'டாக்ஸிக்', 'டிராகன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், பச்சை நிற பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.
இந்நிலையில், இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டவை என்றும், அவற்றை பகிர வேண்டாம் என்றும் நடிகை ருக்மணி வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'AI மூலம் உருவாக்கப்பட்ட எனது சில புகைப்படங்களை நானும் எனது குழுவினரும் இணையத்தில் பார்த்தோம். அவை முற்றிலும் போலியானவை, ஜோடிக்கப்பட்டவை. இது போன்ற உள்ளடக்கங்களை உருவாக்குவதும், பரப்புவதும் முற்றிலும் பொறுப்பற்ற செயல். இது தனிமனித சுதந்திரத்தின் கடுமையான மீறல்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். இந்தப் புகைப்படங்களை உருவாக்கியவர்கள், பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்க உள்ளோம். அப்புகைப்படங்களைப் பகிர்வதைத் தவிரக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றும் ருக்மணி வசந்த் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது போன்ற தவறான பயன்பாடுகள் தனிநபர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற போலியான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.