சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், விமான நிலைய இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள இரண்டாம் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை நியமித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான காந்தி கன்னியப்பன் (வயது 57), கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவருக்கு இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அங்கு பணிக்கு வந்த மற்றொரு ஊழியர், காந்தி கன்னியப்பன் பணியில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடியுள்ளார். அப்போது, இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு அறையில் காந்தி கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.