மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்த கருத்துக்கள் அடாவடித்தனத்தின் உச்சம் என்றும், காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்திற்கே சொந்தமாக்க துடிக்கும் மோசடித்தனம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை' என டி.கே.சிவகுமார் பேசியதை முதல்வர் விஜய் கண்டித்து, கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றுரீதியாக காவிரிக்கும் தமிழ்நாட்டுக்கும் உயிர்த்தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டிய சீமான், உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு எதிராக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமாக்க துடிக்கும் சூழ்ச்சியே மேகேதாட்டுவில் அணை கட்டும் செயல் என சாடியுள்ளார். தமிழர்கள் கேட்காத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது என்றும், காவிரி நதிநீர் உரிமை கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்து அல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களை விட, கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை உண்டு என்ற நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தை விட தமிழ்நாட்டுக்கு அதிக உரிமை உள்ளது. எனவே, டி.கே.சிவகுமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு என்றும், அதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் கண்டித்து, மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பில் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.