2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக எனது அலுவலக பணிகளை நாள்தோறும் காலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி, விளையாட்டுத் துறை அதிகாரிகள், வீரர்கள், சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். உங்களது தேவைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம்' என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் குழுப் போட்டிகளில் மட்டுமே பதக்கங்கள் பெற்றுள்ளனர். தனிநபர் பிரிவுகளில் இதுவரை பதக்கங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையை மாற்றி, வருங்காலங்களில் தனிநபர் பிரிவுகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பதக்கங்கள் வெல்லும் வகையில் தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, இதற்கென அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸாப் குழு உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வது எவ்வளவு கடினமான முயற்சி என்பதை விளையாட்டு வீரர் என்ற முறையில் நான் அறிவேன். எனவே, விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், ஊட்டச்சத்து மிக்க உணவு, உயர்தர பயிற்சி முகாம்கள், உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள், சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க விளையாட்டுத் துறை தயாராக உள்ளது. குறிப்பாக, வரும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது. இந்த உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்வதே ஆகும். அந்த வகையில் 2028-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா, தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க பொதுச் செயலாளர் சைரஸ் பூன்ச்சா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங், பயிற்சியாளர் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனைகள் உடனிருந்தனர்.