பல்வேறு துறைகளின் கூடுதல் பொறுப்புகளை கவனிக்கும் அதிகாரிகளுக்கு, அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, அரசு செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செயலாளர் அந்தஸ்தில் உள்ள சில அதிகாரிகள், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை கவனிப்பதாகக் கூறி, பல அரசு கார்களைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட விதியை அமல்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, ஒரு அதிகாரி மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்புகளை வகித்தாலும், அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்கள் ஒதுக்கப்பட மாட்டாது. இந்த நடவடிக்கை, அரசு வாகனங்கள் அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.
மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை, அங்கீகரிக்கப்பட்ட அலுவல் பணி அல்லது சுற்றுப்பயணங்களின் போது தவிர, மத்திய அரசு அதிகாரிகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், அரசு நிதியை திறம்பட நிர்வகிக்கும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
