கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியது அடாவடித்தனத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். காவிரி நதிநீர் உரிமையை முழுமையாக தங்களுக்கே சொந்தமாக்க கர்நாடகா துடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னடம் பிறப்பதற்கும், கர்நாடகா மாநிலம் உருவாவதற்கும் முன்பிருந்தே காவிரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுரீதியான தொடர்பு உள்ளது. இதை முற்றிலும் துண்டித்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு எதிராக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமாக்க நினைக்கும் சூழ்ச்சியே மேகதாது அணை திட்டம் என சீமான் கூறியுள்ளார். இதை தமிழர்களாகிய நாங்கள் தட்டிக் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வசிப்பவர்களை விட, கடைமடைப் பகுதியில் வசிப்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை உண்டு என்ற நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியில் கர்நாடகத்தை விட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை உள்ளது. எனவே, டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு என்றும், அதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆகவே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை தமிழக முதல்-அமைச்சர் விஜய் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசின் சார்பில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.