வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 'கரப்பான் பூச்சி' என்று குறிப்பிட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய இளைஞர் அப்ஜித் தீப்கே 'காக்ரோச் ஜனதா கட்சி'யை (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) தொடங்கினார். இந்த கட்சி சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பின்தொடரப்பட்டது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் கணக்கை 2.2 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில், 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ் தளம் தவிர மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் அப்ஜித் தீப்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'எங்கள் இணையதளத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர். நாங்கள் கரப்பான் பூச்சிகள். எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது. எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது சர்வாதிகார நடவடிக்கை' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்றும், கட்சியின் எந்த சமூக வலைதள கணக்கும் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவற்றில் வெளியாகும் பதிவுகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கரப்பான் பூச்சிகள் சாகாது, புதிய வடிவில் மீண்டு வருவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் முடக்கத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. இது இந்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கை என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கட்சி புதிய வடிவில் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.