தமிழகத்தில் நாளை (மே 24) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோவை, சேலம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதே இதற்குக் காரணம்.
இந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினமும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வருகின்ற மே 26 முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மேலும், மே 26-ம் தேதி அன்று கோவை, திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் (மே 24 முதல் 27 வரை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பநிலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் பதிவாகக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாலுமுக்கு, ஊத்து (திருநெல்வேலி), போளூர் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.