தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் வன்னியரசுக்கு சமூக நீதித் துறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சார்பில் ஷாஜகானுக்கு வக்பு வாரியம் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து விலகி, முதல்வர் விஜய்யின் தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. அதேபோல், திமுக கூட்டணியில் இருந்த விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் பங்கேற்றன. தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த திமுக, கூட்டணியும் உடைந்ததால் கடும் அதிருப்தியில் உள்ளது.
இந்த சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. அவர் பதிவிட்ட கருத்துக்கள் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளையும், பெண்களையும் இழிவுபடுத்துவதாக எழுந்த எதிர்ப்பால், அவர் அந்த பதிவை நீக்கினார். பின்னர், 'என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?' என மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, 'அதிகாரம் எளியவர்க்கு – அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து – அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்' என பதிவிட்டுள்ளார். முன்னதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன, எவன் போனால் என்ன. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை' என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'ஒரு கட்சியையோ, ஒரு தலைவரையோ பெண்ணின் உறவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவிடம் இன்று கடமையும் இல்லை, கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. இந்த 3 கோட்பாடையும் மறந்துவிட்டார்கள். இதற்கு திமுக தலைவரின் கருத்து என்ன?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், 'தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.