இந்திய ராணுவம் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவுடனான சர்வதேச எல்லையில் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், ராணுவ ஹெலிகாப்டர்களும் முக்கிய பங்காற்றுகின்றன. சரக்குகள் கொண்டு செல்வதற்கும், அதிகாரிகள் பயணத்திற்கும் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி லடாக்கின் லே பகுதியில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது. சிடல் லைட் ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் சச்சின் மேதா மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளனர்.
விபத்து நடந்ததும், உடனடியாக பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த மூன்று பேரையும் மீட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டன. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து, காயமடைந்த ஜெனரல் சச்சின் மேதா மற்றும் அவருடன் பயணித்த அதிகாரிகள் இருவரும் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ராணுவம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.