மும்பையில் நடைபெற்ற பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் பங்கேற்ற இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், எதிர்காலப் போர்களின் தன்மைகள் குறித்து விளக்கினார். இனி வரும் காலங்களில் போர் முறைகள் மனிதசக்தி மற்றும் பாரம்பரிய ஆயுதங்களை மட்டும் சார்ந்திருக்காது என்றும், செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோட்டிக்ஸ், சைபர் சிஸ்டம்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள், துல்லிய தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் தகவல் ஆதிக்கம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம், வேகம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை வெற்றிகரமான செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும் என்று அனில் சவுகான் தெரிவித்தார். எதிர்காலப் போர்கள் பன்முனைத் தன்மை கொண்டவையாக இருக்கும் என்றும், நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றுடன் சைபர் ஸ்பேஸ் மற்றும் அறிவாற்றல் சார்ந்த போர்களும் ஒருங்கிணைந்து நடக்கும் என்றும் அவர் கூறினார். போர்க்களங்கள் புவியியல் சார்ந்ததாக இல்லாமல், தகவல் கட்டமைப்பு, டிஜிட்டல் அமைப்பு மற்றும் சைபர் உள்கட்டமைப்பு சார்ந்ததாக மாறும் என்றும் அவர் விளக்கினார்.
இந்தச் சூழலில், நாட்டின் பாதுகாப்பு என்பது வீரர்களின் துணிச்சலை மட்டும் சார்ந்திருக்காது என்றும், தொழில்நுட்பம், தொழில் திறன், உற்பத்தி பலம் மற்றும் புத்தாக்கத் திறன் ஆகியவை முக்கியத்துவம் பெறும் என்றும் முப்படை தலைமை தளபதி வலியுறுத்தினார். எந்த நாடு உற்பத்தியை அதிகரித்து, தன்னை வேகமாக தகவமைத்துக் கொள்கிறதோ, அந்த நாடு முன்னேறிச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாகவும், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.38 ஆயிரம் கோடியாக உயர்ந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.