சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ராயபுரம் பகுதியில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தை தட்டிக்கேட்ட பெண் சமூக ஆர்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி, காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை காவல் துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியையில், ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, பெண் சமூக ஆர்வலர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சில உறவினர்களுடன் அங்கு சென்று, நீதி கோரி பதாகைகளை ஏந்தி திருமணத்தை நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் பாரதி தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர், வடபழனியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருடன் வேலைபார்த்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தன்னை அந்த இளைஞர் இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொன்னதால் அவரும் மதமாற்றம் செய்துள்ளார். தற்போது வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்ததும், அதைத் தடுக்க வந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தின் போது, இளம் பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் மற்றும் சிலரை ஆய்வாளர் சிதம்பரம் பாரதி ஒருமையில் திட்டியதோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடமும் வரம்பு மீறி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றதில், ஆய்வாளர் சிதம்பரம் பாரதியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.