2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்ததன் மூலம், இந்த சீசனில் அந்த அணியின் பயணம் முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிக்காக முதன்முறையாகக் களமிறங்கிய இந்திய டெஸ்ட் வீரர் சர்பராஸ் கான், தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த சீசன் அவர் அணிக்கு ஒரு சவாலாக அமைந்தது.
தொடரிலிருந்து வெளியேறிய பிறகு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் சர்பராஸ் கான். 'கடந்த 2 மாதங்கள் எனது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாட்களாக அமைந்தன. எனது இதயம் எப்போதும் மஞ்சள் இரத்தத்தையே வடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும், எப்போதும் ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி' என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் தான் இருந்த சில முக்கியத் தருணங்களின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சர்பராஸ் கான் இந்த சீசனில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி 161 ரன்கள் குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 169.47 ஆக இருந்தது. இதில் ஒரு அரைசதமும் அடங்கும். பேட்டிங்கில் மட்டுமின்றி, பீல்டிங்கிலும் அவர் அபாரமாகச் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், 'இது எங்களுக்கு ஒரு சவாலான சீசன். தொடக்கத்தில் வரிசையாக 3 தோல்விகளைச் சந்தித்தாலும், பின்னர் மீண்டு வந்தோம். ஆனால், ஜேமி ஓவர்டன் மற்றும் ராமகிருஷ்ண கோஷ் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் பாதியில் விலகியது அணியின் சமநிலையை நிலைகுலையச் செய்தது. எங்களது அணியில் 8 முதல் 10 வீரர்கள் 20 போட்டிகளுக்கும் குறைவாக விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லும் அணி என்பதால் இந்தச் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இளம் வீரர்களின் போராட்ட குணத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' என்றார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாகத் தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இந்த சீசன் முடிவடைந்தது சென்னை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எனினும், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் சிஎஸ்கே அணியின் மீதான தங்களது பாசத்தை வெளிப்படுத்துவது ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது. 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே அணி, தொடர்ந்து 3-வது ஆண்டாக பிளே-ஆப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
