திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். 2016-ல் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான இவர், 2021-ல் மீண்டும் வென்று நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். சமீபத்தில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்ட இவர், த.வெ.க. வேட்பாளர் முஸ்தபாவிடம் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது நீண்டகால வெளிநாட்டுப் பணியை விட்டுவிட்டு, தேர்தல் அரசியலில் நுழைந்ததாக பி.டி.ஆர். குறிப்பிட்டுள்ளார். பொதுச் சேவையுடன், நீதிக்கட்சியின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தனது முன்னோர்களின் பணிகளைத் தொடர்வது, குடும்பத்தின் நற்பெயரை உருவாக்குவது ஆகிய மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். 60 வயதில் பொது வாழ்க்கையிலிருந்து விலகி, சர்வதேச அளவில் ஒரு தனிப்பட்ட குடிமகனாக வாழ விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
தனது கட்சி, மதுரை மத்திய தொகுதி மற்றும் தமிழ்நாடு அமைச்சரவையில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததற்கும், தனது தனிப்பட்ட இலக்குகளை அடைய முடிந்ததற்கும் அவர் திருப்தி தெரிவித்துள்ளார். இருப்பினும், தொடங்கிய பல திட்டங்களையும் முயற்சிகளையும் முழுமையாக முடிக்க முடியவில்லை என்றும், அமைச்சராக இருந்தபோது நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் சில சீர்திருத்தங்களும் புதிய முயற்சிகளும் முழுமையடையாமல் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரைக்காகப் பாதாள சாக்கடை, புயல் வடிகால் அமைப்புகள், மத்திய சிறைச்சாலையை மாற்றுவது, மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2026 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, விடுபட்ட பணிகளை முடிக்கலாம் என்று நம்பியதாகவும், ஆனால் தேர்தல் முடிவைக் கருத்தில் கொண்டு அந்த நம்பிக்கையைத் தள்ளிப்போட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது இரவும் பகலும் பாராத தொடர் பொறுப்பு என்றும், இப்போது சில வாரங்கள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விலகி, சாதாரண குடிமகனாக வாழ ஆவலோடு இருப்பதாகவும் கூறியுள்ளார். வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்போது அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்க இது நல்ல வாய்ப்பாக அமையும் என்றார். 'ஹார்பர் காலின்ஸ்' நிறுவனத்திற்காக எழுதவிருக்கும் புத்தகப் பணிகளையும் இந்த ஓய்வு நேரத்தில் மேற்கொள்வார். 60 வயதை எட்டியுள்ளதால், உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுச்சேவை மீதான ஆர்வம் குறையவில்லை என்றும், புதிய ஆற்றலோடும் புத்துணர்ச்சியோடும் மீண்டும் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். பி.டி.ஆரின் இந்த முடிவு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.