அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடற்படை மற்றும் விமானப்படை கண்காட்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மேற்கு இடாஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விமான சாகச நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.
நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக, இரண்டு அதிநவீன கடற்படை விமானங்கள் வானில் சாகசங்கள் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த துரதிர்ஷ்டவச சம்பவம், போய்சி நகருக்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே நிகழ்ந்தது. விபத்தின் கோரத்தாண்டவத்தால் இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக விழுந்தன.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, விமானிகள் யாரும் உயிரிழக்கவில்லை. வானில் நெருப்புப் பிழம்புகளாக மாறிய விமானங்களிலிருந்து, நான்கு விமானிகள் உடனடியாகத் தங்களது பாராசூட்டுகளைத் திறந்து பத்திரமாக தரையிறங்கினர். இந்த பயங்கர விபத்து நடந்ததை அடுத்து, விமானக் கண்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.
இந்த விபத்து குறித்து அமெரிக்க பசிபிக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் அமெலியா உமாயம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, விபத்துக்குள்ளானவை வாஷிங்டனில் உள்ள எலக்ட்ரானிக் அட்டாக் ஸ்குவாட்ரன் 129-ஐச் சேர்ந்த இரண்டு EA18-G கிரௌலர் ரக அமெரிக்க கடற்படை விமானங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.