சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை அளிப்பதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்களும் இதே மனநிலையில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா காத்த இந்த இயக்கம் இப்படி பலவீனமடைந்து விட்டதை எண்ணி வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா" என்ற வரிகள் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் செம்மலை. உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுவதாக ஆங்கில நாளிதழ்கள் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கும், அரசியல் அங்கீகாரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், தடுக்கப்பட்டதாகவும், ஆனாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்றி வந்ததாகவும் செம்மலை தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை எண்ணிப் பார்க்கும்போது, தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியில் தொடர்ந்து பயணிக்க மனம் இடம் தரவில்லை என்றும், இதனால் கனத்த இதயத்துடன் தனது பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மன வேதனையை அளிப்பதாகவும், அவை திருப்தி அளிக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தலைவர்களிடம் இருக்க வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்கு இடையே உள்ள 'ஈகோ' தான் கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவை திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும், இதற்கு கட்சியை வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தலின் போது கடுமையாக உழைத்ததாகவும், உட்கட்சி பூசல் காரணமாகவே வெற்றி பெற முடியவில்லை என்றும் கூறிய அவர், எஸ்.பி.வேலுமணியின் பின்னால் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.