பிரபல சினிமா தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே.ராஜன் (85 வயது), சென்னையில் உள்ள அடையாறு மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 5 வருடங்களாக தனி ஹோட்டலில் வசித்து வந்த ராஜனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை, தனது கார் ஓட்டுநர் தனசேகரனுடன் காரில் வேளச்சேரிக்குச் சென்ற ராஜன், அடையாறு மேம்பாலம் அருகே வந்தபோது, 'காரை நிறுத்துப்பா… நான் சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்' எனக் கூறிவிட்டு காரிலிருந்து இறங்கியுள்ளார். சிறிது தூரம் நடந்த அவர், திடீரென மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ராஜனின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கே.ராஜனின் மறைவு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் பிரபு இயக்குனராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராஜன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தனியாக வசித்து வந்துள்ளார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கே.ராஜன் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 கோடி ரூபாய் வரை கடன் பிரச்சனை இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன் சிக்கலா, தனிமைப் பிரச்சனையா அல்லது உடல்நலக் குறைபாடா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது கார் ஓட்டுநரிடமும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.