சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் வெளியாகி மலையாளத்தில் வெற்றி பெற்ற திரைப்படம், வரும் 22-ம் தேதி தமிழில் அதே பெயரில் வெளியாகிறது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும், சிஎஸ்கே வீரருமான சஞ்சு சாம்சன், 'சிறு வயதிலிருந்தே ரஜினி சார், கமல் சார் மற்றும் விஜய் அண்ணா ஆகியோரின் படங்களைப் பார்த்து தான் வளர்ந்தேன்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு, அங்கு கூடியிருந்த தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகு தனது பொறுப்புணர்வு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 'ஒரு பெரிய மற்றும் அதிக கோப்பைகளை வென்ற அணியில் இருக்கும்போது கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. கிரிக்கெட்டைத் தாண்டி வெளியில் ரசிகர்கள் காட்டும் அன்பு பிரமிக்க வைக்கிறது. 'சேட்டா… அடுத்த மேட்ச் ஜெயிங்க, கோப்பையைத் தட்டுறோம், தூக்குறோம்' என்று ரசிகர்கள் இதயத்திலிருந்து வெளிப்படுத்தும் பாசம் நெஞ்சைத் தொடுகிறது' என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது சென்னை பயணம் குறித்துப் பேசிய சஞ்சு, 'தமிழகம் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள நாயர் மெஸ் உணவகத்தில் சாப்பிட்டேன், அங்கு உணவு மிக அற்புதமாக இருந்தது' என்று தனது சென்னை மீதான அன்பை வெளிப்படுத்தினார். சினிமாவில் நடிப்பது குறித்து நகைச்சுவையாகப் பேசிய அவர், தனக்கு ஒருமுறை சினிமாவில் சிறிய கதாபாத்திரம் வந்தபோது, 'பெரிய ரோல் கொடுத்தால் தான் நடிப்பேன்' என்று கூறி மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். சிஎஸ்கே அணி தற்போது 2026 ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
