ஆர்யா, கவுதம் கார்த்திக், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம், எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை என இயக்குநர் மனு ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், படம் பார்த்த, ஆதரித்த, விவாதித்த, விமர்சித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். 'மிஸ்டர் எக்ஸ்' ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவான திரைப்படம் என்றும், பொதுமக்கள் ரசிக்கும் வணிக சினிமாவின் பிரம்மாண்டத்துடன், சற்று மாறுபட்ட ஒரு கதையை சொல்ல முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே, தனித்துவமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் ஒரு திரையரங்கு அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கமாக இருந்ததாக மனு ஆனந்த் கூறியுள்ளார். இருப்பினும், 2026 ஏப்ரல் 17 அன்று படம் வெளியானபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத் தேர்தலின் போட்டி நிறைந்த வாரத்தில் அவர்கள் களமிறங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படம் பல தரப்பிலிருந்து நல்ல விமர்சனங்களையும், நேர்மறையான பார்வையாளர் கருத்துகளையும் பெற்றிருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை என்பதை அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படக் கலைஞர்களாக ஒரு படம் ஏன் மக்களுடன் இணைகிறது அல்லது ஏன் வணிக ரீதியாக தோல்வியடைகிறது என்பதைப் பல கோணங்களில் ஆய்வு செய்யலாம் என்றும், ஆனால் இறுதியில் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் முழுப் பொறுப்பும் தன்னுடையதே என்பதை இயக்குநர் மனு ஆனந்த் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். சினிமா ஒரு சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் கணிக்க முடியாத ஊடகம் என்றும், ஒவ்வொரு படமும் உங்களுக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்றும், இந்தப் பாடங்களை மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் எடுத்துச் செல்வேன் என்றும் மனு ஆனந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.