ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 65 அடி உயர திரிசூலம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. உடுக்கையுடன் கூடிய இந்த பிரம்மாண்டமான திரிசூலம், கைலாசகிரி மலைப்பகுதியின் அழகிற்கு மேலும் மெருகூட்டியுள்ளது.
விசாகப்பட்டினத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கைலாசகிரி மலை, அதன் சிவன் மற்றும் பார்வதி சிலைகளுக்குப் பெயர் பெற்றது. வார இறுதி நாட்கள், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்தச் சூழலில், இப்பகுதியை மேலும் மேம்படுத்தும் நோக்கில், விசாகப்பட்டினம் நகர வளர்ச்சி கழகம் (VMRDA) இந்த பிரம்மாண்டமான திரிசூலத்தை அமைத்துள்ளது. சுமார் 8 மாத கால கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, சமீபத்தில் இதன் திறப்பு விழா நடைபெற்றது.
சுமார் 65 அடி உயரம் கொண்ட இந்த திரிசூலத்தின் உடுக்கை 18 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்டுள்ளது. இரவில் எல்.இ.டி. விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் இந்த திரிசூலத்தை, நகரின் பல பகுதிகளில் இருந்தும் காண முடியும். ரோப்-வே வசதி கொண்ட இந்த மலைக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆந்திர கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலின் புனரமைப்புப் பணிகளின் 75 ஆண்டுகளை நாம் கொண்டாடும் இந்த வேளையில், விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம் அமைக்கப்பட்டிருப்பது ஆந்திராவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது நமது இந்திய கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் பறைசாற்றுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நாராயணா பூஜைகள் நடத்தி இந்த திரிசூலத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்தார்.