அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக எம்.பி வில்சன் மற்றும் அதிமுக எம்.பி இன்பதுரை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக எம்.பி வில்சன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'கடந்த 21 நாட்களில் கட்சித் தாவல் புகாரில் சிக்கிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, பதவியை ராஜினாமா செய்த உடனேயே தலைமைச் செயலக வளாகத்திலேயே தவெகவில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு தலைமைச் செயலகத்தையும், அதிகாரப்பூர்வ அறைகளையும் பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது தேர்தல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணமும் நேரமும் வீணடிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் தள பக்கத்தில், 'அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதற்கு முன்பே, அவர்கள் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து, கட்சியில் இணைந்து, உறுப்பினர் அடையாள அட்டையை மின்னல் வேகத்தில் பெற்றுள்ளனர். இது 100 சதவீத குதிரை பேரம்!' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திடீர் அரசியல் நகர்வு, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் மற்றும் அதன் பின்னணி குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகத்தையும் இது எழுப்பியுள்ளது.