அதிமுகவில் இருந்து சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சியில் இணைவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேர் தவெக கட்சியில் இணைய தயாராக உள்ளனர். ஏற்கனவே அதிமுகவின் தற்போதைய அரசியல் சூழலை உற்றுநோக்கி, 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு வந்துவிட்டனர். மேலும், அடுத்ததாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இணைய காத்திருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தவெகவில் இணைந்துவிடுவார்கள். ஆக மொத்தம், அதிமுகவில் இருந்து மொத்தம் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சியில் இணைவார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், '11 முறை தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கு, விஜய் தான் நிரந்தர முதலமைச்சர் என்பது எப்படி தெரியும்? மதிமுக கட்சி எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ, அதேபோல் அதிமுகவும் ஆகிவிடும். இன்னும் சில நாட்களில் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள், தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். 60 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகளை, தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்துவிட்டார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு, சட்டப்பேரவை தலைவரிடம் 'சார் சார்' என கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்று விமர்சித்தார்.
'இந்த கட்சி ஆறு மாதங்கள் கூட தாக்குப்பிடிக்குமா என்று பலர் கூறினார்கள். ஆனால், தவெகவின் தலைவர் விஜய் இருக்கும் வரை, அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர். தவெக சார்பில் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆளுநர் 118 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வர வேண்டும் என்று கூறியுள்ளார். 47 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஒருவர் முதலமைச்சர் என்று கூறினால், 108 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாங்கள் சும்மா இருப்போமா? தவெகவில் 108 பேர் வெற்றி பெற்ற நிலையில், நாங்கள் மேலும் 10 பேரை கொண்டு வந்தால், இந்த அரசியல் போட்டியே முடிந்துவிடும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

