தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக நிர்வாகியும், தனியார் பள்ளி சங்கத் தலைவருமான பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மற்றும் பண மோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகப் புகார்தாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுமார் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த மோசடியின் மதிப்பு ரூ.200 கோடி வரை இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்த பள்ளி நிர்வாகிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளிடம் தலா ரூ.25 லட்சம் முதல் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
கைதான பி.டி. அரசகுமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.