இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் (NTA) வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர், தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் 12-வது இடத்தையும் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகனான வெங்கடபதி வேலாயுதம், சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்றவர். இவர் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களைப் பெற்று, தென்னிந்திய அளவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார்.
தேசிய அளவில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்சூல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் ஒப்பிடுகையில், தமிழக மாணவர் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தனித்து நிற்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, வெங்கடபதி வேலாயுதம் முதலிடம் பிடித்த நிலையில், மாநிலத்தைச் சேர்ந்த இதர மாணவர்களும் தேசிய தரவரிசையில் தங்களது முத்திரையைப் பதித்துள்ளனர். சுடர் 45-வது இடத்தையும், சபரி 59-வது இடத்தையும், ஜெய் கிருஷ்ணா 75-வது இடத்தையும், மாணவி சாம்விதா 82-வது இடத்தையும், நவீதனா 88-வது இடத்தையும், ஜனனி ஸ்வேதா 112-வது இடத்தையும், ரோகித் மேத்யூ 115-வது இடத்தையும், மற்றொரு ஜெய் கிருஷ்ணா 134-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த நீட் தேர்வில், 17 முதல் 19 வயதுடைய தேர்வர்களே அதிக மதிப்பெண்களைக் குவித்துள்ளனர். குறிப்பாக, முதன்முறையாக இத்தேர்வை எழுதிய மாணவர்களில் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது மாணவர்களின் கடின உழைப்புக்கும், கல்வி முறைக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
மதிப்பெண் வாரியான விவரங்களைப் பார்க்கும்போது, 690-க்கும் அதிகமாக 138 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 19 மாணவர்கள் 700-க்கும் அதிகமாக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மேலும், 650-க்கும் அதிகமாக 1,492 மாணவர்களும், 600-க்கும் அதிகமாக 10,160 மாணவர்களும், 500-க்கும் அதிகமாக 90,780 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சுமார் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில், மொத்தம் 11.21 லட்சம் பேர் மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில், தகுதி பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 58 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் மொத்தம் 13 மொழிகளில் 5,440 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 24,06,079 பேர் இத்தேர்வெழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 20 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். திருத்தப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
