தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). தொழிலாளியான இவருக்கும், பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் தமிழ்செல்வம்(29) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்பகை இருந்து வந்துள்ளது.
நேற்று காலையில் வேல்முருகன் காந்திநகர் சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்செல்வம் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து வேல்முருகனை வழிமறித்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த தமிழ்செல்வம் தான் வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வேல்முருகன், சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்செல்வம் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த நடராஜபுரம் செல்வராஜ் மகன் சுந்தரபாண்டியன்(32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.