துபாயில் தொழில் செய்து வரும் இன்டீரியர் டிசைனர் சாரா ஷாம், தனது ஊழியர்களின் நலனுக்காக வாடிக்கையாளர்களைக் கூட இழந்தாலும் பரவாயில்லை என்ற கொள்கையுடன் செயல்பட்டு, தற்போது தொழில் அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறார்.
துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் சாரா ஷாம், 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் வடிவமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். பொதுவாக வடிவமைப்பு மற்றும் கார்ப்பரேட் துறைகளில் வேலை நேரம் முடிவடைந்த பின்னரும், வார இறுதி நாட்களிலும் பணிபுரிவது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சாரா ஷாம் தனது அலுவலகத்தில் முற்றிலும் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறார்.
அவரது அலுவலகத்தில் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி. வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களின் அழைப்புகளுக்கோ, புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பணிச்சுமை அதிகமாகும் போது, ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்யச் சொல்வதற்குப் பதிலாக, புதிய டிசைனரை வேலைக்கு அமர்த்துவதுதான் இவரது தீர்வாக உள்ளது.
தனது ஆரம்பக்கால வாழ்க்கையில் தானும் இரவு பகலாக வேலை செய்து, குடும்பத்துடன் இரவு உணவைக் கூடத் தவிர்த்து சனிக்கிழமைகளில் உழைத்ததாக சாரா குறிப்பிடுகிறார். ஆனால், போகப் போக அவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். இரவு முழுவதும் விழித்திருந்து, ஓய்வின்றிச் செய்யப்பட்ட வேலைகளை விட, நன்கு ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் வந்த டிசைனர்களின் படைப்புகளே மிகச் சிறந்ததாக இருந்தன.
'படைப்பாற்றல் என்பது ஒரு கிணறு போன்றது. அதை குழாயைப் போல எப்போதும் திருப்பிக் கொண்டே இருக்க முடியாது; ஓய்வு இல்லையெனில் அது வற்றிவிடும்' என்று அவர் தனது கருத்தை விளக்கினார். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தங்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்றும், நள்ளிரவு வரை வேலை பார்க்க வேண்டும் என்றும் விரும்பிய சில வாடிக்கையாளர்களைத் தனது கொள்கைக்காக இழக்க நேரிட்டதாக சாரா கூறுகிறார்.
“வாடிக்கையாளர்களை இழப்பதா அல்லது எங்கள் அலுவலக விதியைக் கைவிடுவதா என்ற சூழல் வந்தபோது, நான் வாடிக்கையாளர்களைப் போகச் சொன்னேனே தவிர, என் ஊழியர்களுக்கான விதியைக் கைவிடவில்லை” என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
2019-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் ஜப்பான் நிறுவனம் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்திய ‘4 நாள் வேலை வார’ திட்டத்தைக் குறிப்பிட்ட சாரா, இதன் மூலம் உற்பத்தித் திறன் 40% வரை அதிகரித்ததைச் சுட்டிக்காட்டினார். நன்கு ஓய்வெடுக்கும் ஊழியர்களே சிறந்த திறனை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இதுவே சான்று என்கிறார் அவர்.
அதிக நேரம் உழைப்பதே அர்ப்பணிப்பு என்ற தவறான பிம்பம் நிலவி வரும் சூழலில், ஊழியர்களின் மன நலனுக்கும் ஓய்வுக்கும் முன்னுரிமை அளிக்கும் சாராவின் இந்த முடிவு, சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு, ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

