வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மத்திய அரசு தடை – மெட்டா விளக்கம்

வாட்ஸ்அப் செயலியின் புதிய 'யூசர்நேம்' அம்சத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயனர்களின் கைப்பேசி எண்களைப் பகிராமல், தனித்துவமான பயனர் பெயர்கள் மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான இந்த புதிய அம்சத்தை, அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்த கலந்தாலோசனைகள் முடிவடையும் வரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என மெட்டா நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படும், பயனர்களைச் சரிபார்க்க என்ன வழிமுறைகள் இருக்கும், மேலும் ஆள்மாறாட்டம், இணையவழி மோசடி மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்க நிறுவனம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு மெட்டா நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கம் கோரியுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. 'வாட்ஸ்அப் செயலியில் முன்மொழியப்பட்டுள்ள 'பயனர் பெயர்' (Username) வசதி இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போதைய சூழலில் வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்கிப் பயன்படுத்துவதற்குப் பயனர்களின் மொபைல் எண் இன்னமும் கட்டாயமான ஒன்றாகவே நீடிக்கிறது' என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்திப் போலி கணக்குகள் உருவாக்குவது மற்றும் ஆள்மாறாட்டம் செய்வதைத் தடுக்கப் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் நிறுவனம் விளக்கியுள்ளது.

குறிப்பாக, பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களில் மற்றவர்கள் போலி யூசர்நேம்களை முன்பதிவு செய்யாமல் இருக்க, அந்த முக்கியக் கணக்குகளின் பயனர் பெயர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு (Reserved) பாதுகாக்கப்பட்டுள்ளன. பயனர் பெயர் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க 'பல அடுக்கு பாதுகாப்பு' (Multi-layered security) வழிமுறைகள் மற்றும் 'யூசர்நேம் கீ' (Username Key) போன்ற கூடுதல் தனியுரிமை அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடனான ஆலோசனைகள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஆய்வுகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, நடப்பு 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த புதிய அம்சம் இந்தியாவில் படிப்படியாக (Phase-wise) அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த விரிவான விளக்கத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version