மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 100 திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பட்​பாரா நகராட்சியில் ஒரே நேரத்தில் 30 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஹலிசஹர் நகராட்சியில் 16, கஞ்சரபாரா 14, கருலியா நகராட்சியில் 18, நார்ட் பாரக்பூர் நகராட்சியில் 15, கொண்டாய் நகராட்சியில் 14 கவுன்சிலர்கள் என பல நகராட்சிகளிலும் திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது திரிணமூல் காங்கிரஸின் உட்கட்சி பூசல்களையும், கட்சித் தலைமை மீதான அதிருப்தியையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் விவகாரங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பல உள்நாட்டு அமைப்புகளில் திரிணமூல் கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்ச உணர்வின் காரணமாகவே ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது திரிணமூல் காங்கிரஸின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி காக்லி கோஷ் தஸ்திதார் பங்கேற்றார். இவர் சில நாட்களுக்கு முன்பு திரிணமூலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார். மேலும், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த அனிசூர் ரஹ்மான் பிதேஷ், புர்கானுல் முகாதீன், வீணா மண்டல், அப்துல் மாதின் ஆகிய 4 எம்எல்ஏக்கள் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் சில திரிணமூல் எம்எல்ஏக்களும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் பாஜக 208 இடங்களை கைப்பற்றிய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்றது. எம்எல்ஏக்கள் அணி மாறுவதால் திரிணமூலின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த சூழலில், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 'விரும்பாதவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம்' என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version